நல்ல கிரிக்கெட்டை கொண்டாடிய ரசிகர்கள்... உணர்ச்சி பெருக்கில் ஆப்கான்...

ஆப்கானிஸ்தான் அணி, நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை (PAK vs AFG) வீழ்த்தி தொடரை இன்னும் சுவாரஸ்யமாக்கி உள்ளது. மேலும், புள்ளிப்பட்டியிலும் ஆப்கானிஸ்தான் 6ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஆப்கானிஸ்தான் வெற்றி அந்நாட்டு ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்குமே பெரும் வெற்றி களிப்பை அளித்திருக்கும்.

ஆப்கானிஸ்தான் அணி (Afghanistan National Cricket Team) தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில், எதாவது ஒரு காரணத்தால் வெற்றியை மட்டும் தவறவிட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், இம்முறை நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியனும் ஓடிஐ தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியையும் ஆப்கானிஸ்தான் வீழ்த்தி அதன் தலைசிறந்த ஆட்டத்திறனை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றி ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு சென்னை ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு என்பது அளவிட முடியாதது எனலாம். நேற்றைய போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டு ரசிகர்களும், இரு அணிகளுக்கும் ஆதரவளிக்கும் உள்ளூர் ரசிகர்களும் என சேப்பாக்கம் (Chennai Chepauk Stadium) நேற்று வேற லெவல் வைப்பில் இருந்தது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியின் (Paksistan National Cricket Team) ஓப்பனர் இமாம்-உல்-ஹக் அவுட்டாகி வெளியேற கேப்டன் பாபர் என்ட்ரி கொடுத்தார். விக்ரம் வேதா படத்தின் மிரட்டலா பின்னணி இசை ஒலிக்க, சுற்றியிருந்த ரசிகர்கள் 'பாபர், பாபர்...' என கூச்சலிட ஒரு மாஸ் ஹீரோவுக்கான என்ட்ரியை கொடுத்தார் பாபர் அசாம். பார்வையாளர்கள் மத்தியில் இந்திய ஜெர்ஸி அணிந்திருந்தவர்கள், பாகிஸ்தான் ஜெர்ஸி அணிந்திருந்தவர் என அனைவரும் ஒன்றாக பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்து வந்தனர்.

முதலில் பாகிஸ்தானுக்கே அதிக ஆதரவு இருப்பது போல் தோன்றினாலும், ரஷித் கான் 15 ஓவரில் பந்துவீச வரும்போதும் பாபருக்கு சமமாக அவருக்கும் கரகோஷங்கள் எழுந்தன. ஒவ்வொரு பவுண்டரிகளுக்கும், சிக்ஸர்களுக்கும், ஏன் விக்கெட்களுக்கும் உள்ளூர் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதே இரண்டாம் பாதியில் குர்பாஸ் - இப்ராஹிம் சத்ரான் ஜோடியின் 100+ பார்ட்னர்ஷிப்பை ஒட்டுமொத்த சேப்பாக்கமே கொண்டாடித் தீர்த்தது எனலாம். இருவரும் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது, அனைத்து பார்வையாளர்களுக்கும் அவர்களை உற்சாகப்படுத்தினர்.

பாகிஸ்தான் அணிக்கு அகமதாபாத் மைதானத்தில் சில ஏற்றுக்கொள்ள முடியாத சம்பவங்கள் நடந்தாலும் சேப்பாக்கம் கிரிக்கெட்டுக்கான மரியாதை, வீரர்களுக்கான மரியாதையை வழங்கினர் எனலாம். நல்ல கிரிக்கெட்டை கொண்டுவது என்பது சேப்பாக்கத்திற்கு புதிதில்லை என்பது நேற்று மீண்டும் நிரூபணமானது. நபி, ரஷித் கான் (Rashid Khan) உள்ளிட்டோர் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். குறிப்பாக, வெற்றிக்கு பின் ஆப்கன் வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வெற்றி வலம் வந்தனர். மேலும், ஆப்கன் வீரர்கள் பேருந்தில் செல்லும்போது லுங்கி டேன்ஸ் பாடலுக்கு நடனமாடி வெற்றியை கொண்டாடிய வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.